டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்!
Recommended Video
சென்னை: தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக இருந்தது. அதில் 31 லட்சம் பேர் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவையை சேர்ந்தவர்கள்.
2 கோடிக்கு மேல்
தற்போது இளைஞர் -இளம்பெண்கள் பாசறையில் இருப்பவர்களுக்கு வயதாகிவிட்டதால் அந்த பிரிவில் உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அச்சமயம் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும்.
ஆதரவு
அதிமுக அமைப்பு தேர்தல் முறைப்படியான அறிவிப்புடன் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும். எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எங்களிடம்தான் உள்ளது. தொண்டர்களும் எங்களுக்குதான் ஆதரவு அளித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இயக்கம் வலுவானதாக என்றும் நிலைத்து நிற்கும். எனவே அதிமுகவில் மீண்டும் சேராத தொண்டர்கள் டிடிவி தினகரன் பக்கம் சென்றுவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
விளக்கம் கேட்பு
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் பிரபு, கலைசெல்வன், ரத்தின சபாபதி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.