பார்ரா.. விட்டா, ட்ரம்ப் வெற்றிக்கே நான்தான் காரணம் என்பார் போல.. ஓபிஎஸை ஓட்டும் ஜெயக்குமார்!
ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்றும் ஓபிஎஸ் கூறுவார் என்றும் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.
சசிகலா குடும்பம் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அன்றிரவே சசிகல குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவதாக தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
டிடிவி.தினகரனால் கட்சிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறினர். டிடிவி.தினகரனும் தான் விலகுவதால் கட்சிக்கு நல்லது நடக்கும் என்றால் நான் விலகுகிறேன் என்றார்.
ஓபிஎஸ்க்கு பதில்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சசிகலா குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டது தாங்கள் நடத்தும் தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸின் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.
ஓபிஎஸ் நிர்பந்தம் காரணமல்ல
இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைக்கவில்லை என்றார். கட்சியின் நலனுக்காகவே அனைவரும் பேசி சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் வெற்றிக்கே நான்தான் காரணம்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கே நான்தான் காரணம் என ஓபிஎஸ் கூறுவார் என்றும் அவர் கிண்டலடித்தார். ஓபிஎஸ் அணியினருடன் பேச குழு அமைப்பதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அவர் ஜெயக்குமார் கூறினார்.
அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
கடந்த சட்டசபை நிதிநிலைக் கூட்டத்தொடரின் போதே ஓபிபஎஸ் ஒரு சிறந்த நடிகர், ஆஸ்கர் நாயகன் என்றெல்லாம் விளாசினார் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் தற்போது இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவரை கேலி செய்யும் விதமாக ஜெயக்குமார் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.