மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று காலை, நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரி ஓபிஎஸ், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இன்று சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மீது வழக்கு பதிவின்றி உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற்றும் 120 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்றும் ஓபிஎஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.