இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம்:
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூலை 24ஆம் தேதி 1983-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.
இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கைக்கு திரும்பி உள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை அவர்கள் நாட்டுக்கு திரும்பி அனுப்ப மத்திய அரசு தமிழக உயர் அதிகாரியை வருகிற 30ஆம்தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு அனைத்து உதவிகளும் தமிழக அரசு ஆணைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நல திட்டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது இலங்கை வடகிழக்கு பகுதியில் இன்னமும் சுமூகமான சூழ்நிலை ஏற்படவில்லை. ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அங்கு நிலைமைகள் மாறும் வரை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.