ஒரத்தநாட்டில் பழனிமணிக்கம் தம்பி ராஜ்குமார் போட்டியிட மறுப்பு- புதிய வேட்பாளரை அறிவித்த திமுக!!
தஞ்சாவூர்: ஒரத்தநாடு தொகுதியில் தாம் போட்டியிட விரும்பவில்லை... வேறு ஒரு வேட்பாளரை அறிவியுங்கள் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் திமுக தலைமைக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி அளித்தார். இதனைத் தொடர்ந்தே ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளராக எம். ராமச்சந்திரனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுகவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கபட்ட நிலையில் மு.க.ஸ்டலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதியின் தேர்தல் பிரசார பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி திமுகவினர் கலகம் எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரத்தநாடு தொகுதியிலோ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜ்குமார் தாம் போட்டியிட போவதில்லை என கூறியிருக்கிறார்.
போட்டியிட மறுப்பு
ஒரத்தநாடு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கபட்ட ராஜ்குமார், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் தம்பி. தற்போது ராஜ்குமார் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறியிருப்பதால் தி.மு.க. தலைமை இன்று எம்.ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.
வைத்தியலிங்கத்தை வெல்ல முடியாது?
ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் அமைச்சர் வைத்திலிங்கம். இந்த தொகுதியில் இதுவரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி அவர் பெற்றுள்ளார். தற்போது அ.தி.மு.க. அவருக்கு 4வது முறையாக வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என ராஜ்குமார் நினைத்தாராம்.
சசிகலா குடும்ப சகலை
அத்துடன் சசிகலாவும், பழனிமாணிக்கமும் உறவினர்கள். ராஜ்குமாரும் சசிகலா அண்ணன் மகன் மகாதேவனும் ஒரே குடும்பத்தில்தான் திருமணம் செய்துள்ளனர். இதனால் சசிகலா வகையறாக்களின் நெருக்கடியால் ராஜ்குமார் போட்டியிடவில்லை எனவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர்தான் காரணமா?
இருப்பினும் தாம் கேட்ட தஞ்சாவூர் தொகுதியை தராத அதிருப்தியில்தான் ராஜ்குமார் இம்முடிவை எடுத்து கட்சித் தலைமைக்கு தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில்தான் இன்று ஒரத்தநாடு தொகுதிக்கு புதிய வேட்பாளராக எம். ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.