இந்திய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
சென்னை: இந்திய அளவில் உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில், உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு அதுகுறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் உடல் உறுப்பு தானங்கள் செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகம் இல்லை. இந்திய அளவில் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விழிப்புணர்வுபேரணி மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.
மேலும் இப்பேரணி உடல் உறுப்புதானம் என்றால் என்ன என்பது குறித்து நன்கு அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பேரணியில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.