இயற்கை வேளாண்மைக்காக முளைத்த வித்து நம்மாழ்வாரின் 80வது பிறந்தநாள்.. இயற்கை ஆர்வலர்கள் கொண்டாட்டம்
இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை மண்ணில் விதைத்துவிட்டு மறைந்த வேளாண்மை நாயகனின் 80வது பிறந்த நாள் இன்று. இதனை இயற்கை ஆர்வலர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: நம்முடைய வேப்பிலையை அமெரிக்கா காப்புரிமை பெற்ற போது கடுமையாக போராடியதோடு, அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியவர் நம்மாழ்வார்.
1938 ஆண்டு இதே நாளில் தஞ்சையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளங்கலைப்படிப்பை படித்தவர். அறிவியலில் முனைவர் பெற்ற இவர் ஜப்பானிய விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலில் நாட்டம் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றிருந்த அவர், பின்னர் நண்பர்களிடம் சேர்ந்து இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டார்.
மரபணு மாற்றம்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பயிர்களை விளைவிக்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடும் பிரச்சாரங்களை நம்மாழ்வார் மேற்கொண்டார். மேலும், இயற்கை உரம், இயற்கையான உணவு ஆகியவற்றுக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இயற்கை வேளாண்மை
கடந்த 2004ம் ஆண்டில் பூம்புகார் முதல் கல்லணை வரை உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கு நம்மாழ்வார் சென்றார். அங்கு கிராம மக்களை சந்தித்து இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
வேப்பிலைக்கு காப்புரிமை
நம்முடைய வேப்பிலையை அமெரிக்கா காப்புரிமை பெற்றது. அப்போது அதற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வென்றார். பெரும் போராட்டத்திற்கு பின்னர்தான் இந்தியா அதனை மீட்டது. அதற்கான பெருங்குரலை நம்மாழ்வார் எழுப்பினார்.
மீத்தேன் எதிர்ப்பு
அதே போன்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதற்கான முதல் குரலை கொடுத்தவர் இயற்கை நாயகன் நம்மாழ்வார்தான்.
வானகம்
இனி பயிரே விளையாது என்ற நிலையில் இருந்த நிலத்தை எல்லாம் பசுமை பயிர் விளையும் பூமியாக்கிய வானகம் இவரது மிகப் பெரிய வெற்றி. நம்மாழ்வார் மறைந்தாலும் அவரது தொண்டர்களாலும் இயற்கை ஆர்வலர்களாலும் தொடர்ந்து நடத்தப்படும் வானகத்தில் இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை கருத்தாக்கங்களை கொண்டு செல்லப்படுகிறது. இன்று கொஞ்சமாவது இயற்கை உணவு, இயற்கை விஞ்ஞானம் பற்றி பேச ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறதென்றால் அதற்கு இவர்தான் முதல் வித்து என்பதை யாராலும் மறுக்க முடியாது.