மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்!
மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலம் குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி மூளைச்சாவு அடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலம் குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற தொழிலாளி கடந்த 14 ஆம் தேதி இருசக்கர ஊர்தியில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
நேற்று அவரது உடலில் இருந்து உறுப்புகளை அகற்றிய மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்காக மருத்துவமனையிலிருந்து மதுரை விமான நிலையம் வரை சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து விரைவு படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியின் கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவரது சிறுநீரகங்கள் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.