ஓரினச்சேர்கையாளர்களுக்கு பாதுகாப்பு தேவை: சென்னையில் எல்.ஜி.பி.டி. அமைப்பினர் கோரிக்கை
சென்னை: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆர்லாண்டோ நகரில் ஓரினச்சேர்க்கையாளர்களின் இரவு விடுதி ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்த சென்னையில் எல்.ஜி.பி.டி. அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஓரினச்சேர்க்கையாளர்கள் பலவித தாக்குதலுக்கு ஆளாவதாகவும், சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்லாண்டோ நகரில் தன் பாலின உறவாளர்களுக்காக 'பல்ஸ் நைட் கிளப்' என்ற விடுதி செயல்படுகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு கூடியிருந்த 100 பேரை தீவிரவாதி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்வாட் போலீசார், கொலையாளியின் கவனத்தை திசை திருப்பி சுட்டுக்கொன்றனர். ஃப்ளோரிடாவின் ஆர்லாண்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்க வரலாற்றில் கருப்பு பக்கமாக அமைந்துவிட்டது. இந்த கொலைவெறி தாக்குதலில் பலியானவர்களுக்கு உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுகப் பாலம் எல்.ஜி.பி.டி. இனத்தவர்களின் கொடியான வானவில்லின் நிறங்களால் ஒளியூட்டப்பட்டது. இதேபோல், சிட்னி டவுன் ஹாலும் இளஞ்சிகப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் ஒன்று கூடிய எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆர்லாண்டோ சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் பலவித தாக்குதலுக்கு ஆளாவதாகவும், சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எதற்காக கொல்லப்படுகிறோம்? ஏன் இந்த தாக்குதல் என்பதை அறியாமலேயே பலர் மாண்டு போயுள்ளனர். அனைத்து மதத்தினரும் எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற அரசு முன் வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.