வேற்றுமொழிக்காரன் எங்களை ஆள நினைக்கக் கூடாது - இயக்குநர் பாரதிராஜா கொந்தளிப்பு: வீடியோ
தமிழனுக்கு மொழி, இனம் மீதான உணர்வு துருப்பிடித்துவிட்டது. வேற்றுமொழிக்கரர்கள் இங்கு தொழில் செய்யலாம். ஆனால் எங்களை ஆள நினைக்கக் கூடாது என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ள்ளார்.
சென்னை: மத்திய அரசை விமர்சித்து பேசியதற்காக திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டனத்துக்குரியது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், கவுதமன் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதுகுறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பாரதிராஜா,'' மத்திய அரசைக் கண்டித்து கொஞ்சமே கொஞ்சம் பேசினார். மத்திய அரசை யாரும் விமர்சிக்கக் கூடாது? உடனே அவர்களை சிறையில் அடைப்பீர்களா? கௌதமன் பேசினார். அவரை சிறையில் தள்ளினீர்கள். அமீர், சீமான் அரசுக்கு எதிராகப் பேசினார்கள். அவர்களையும் சிறையில் தள்ளீனிர்ர்கள்.
நானும் பேசினேன். ஆனால் என்னை சிறை வைக்கவில்லை. யாரை சிறையில் வைக்க வேண்டும் என்று அதையும் கணக்கிட்டுச் செய்கிறீர்கள். அடுத்த விஷயம், வேறு எங்காவது சென்று ஒரு தமிழன் அரசியல் செய்ய முடியுமா? தமிழன் வேறு எங்காவது பதவியில் இருக்க முடியுமா?
ஒரு சமஸ்தானமாக இருந்த போது யார் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம் என பரந்த மனதோடு இருந்தோம். தமிழனுக்கு நல்ல மூளை வளர்ச்சி உள்ளது.பரந்த இதயம் உள்ளது. ஆனால் இனம்,மொழி விஷயத்தில் துருப்பிடித்து உள்ளான். காரணம் தமிழ் நாட்டிலேயே தமிழன் மைனாரிட்டியாக உள்ளான். இங்கு எல்லாரும் படை எடுத்து வந்தார்கள். சிலர் கூடாரம் போட்டு உட்கார்ந்துவிட்டார்கள்.
வேற்று மொழிக்காரர்கள் தமிழகத்துக்கு வாருங்கள். தொழில் செய்யுங்கள். அரசியல் கூட செய்யுங்கள். ஆனால் எங்கள் தலைவன் ஆகலாம் என்று நினைத்துப் பார்க்காதீர்கள். முயற்சி செய்யாதீர்கள். இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்தான் இந்த மண்ணை ஆள வேண்டும்'' என பாரதிராஜா பேசினார்.