தமிழகத்தில் உள்ளவர்களுக்கே வேலையில்லை.. இதில் வெளிமாநிலத்தவருக்கு வேறா... ராமதாஸ் காட்டம்
தமிழக போட்டித் தேர்வுகளில் வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக போட்டித் தேர்வுகளில் வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்புகள் வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 1, வி.ஏ.ஓ. உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது.இந்நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 இல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது.
இப்போட்டித் தேர்வில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலையில் மற்ற மாநிலத்தவருக்கு வாய்ப்பு தருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் நிலவி வருகின்றன.
உரிமையாளர் தெரியவில்லை
நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னை தி.நகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வங்காள விரிகுடாவுக்கு யார் உரிமையாளர் என்று தெரியாததால் சசிகலா அந்த இடத்தை வாங்க வில்லை என்று அப்போது நாளேடுகளில் நகைச்சுவையாக சொல்வதுண்டு.
வெளிமாநிலத்தவருக்கு
வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்களுக்கு கொடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டது. தமிழக அரசு பாலிடெக்னிக்குகளில் 1058 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றுள் 107 பணியிடங்கள் வெளிமாநிலத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மொழித்தேர்வில் தேர்ச்சி
இதை கண்டித்து கடந்த 10-ஆம் தேதி நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும் எந்த மாநிலத்தவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தமிழ் தெரியா விட்டாலும், பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் தமிழ் கற்று கொண்டு அதற்கான மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 சதவீதம் பணியிடங்கள்
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பையும் கனவையும் இது சிதைத்துவிடும். இது மிகப்பெரிய சதி. ஏற்கெனவே மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் வடஇந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் அதிகப்பட்சமாக ஓராண்டுக்கு 15,000 பேருக்கு மட்டும்தான் அரசு பணி கிடைக்கிறது. அந்த பணிகளிலும் 31 சதவீதம் பணியிடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்த்தால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்.
வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பு
இதுபோல் மற்ற மாநிலங்களில் இல்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து விட்டு வேலையின்றி தவித்து வருகின்றனர். இது பதிவு செய்துள்ளவர்களின் நிலவரம். பதிவு செய்யாமல் படித்துவிட்டு 50 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
கொந்தளிப்பு ஏற்படும்
கிட்டதட்ட 1.30 கோடி பேர் தமிழகத்தில வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நிலை நீடித்தால் தமிழக இளைஞர்களிடம் இருந்து மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.