டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதிக்கக்கூடாது: பெ.மணியரசன்
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதிக்கக்கூடாது என்று பெ.மணியரசன் கோரிக்கை வைத்து உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வில், வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் சார்பில், 9351 காலி பணியிடங்களுக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ளது. இதில் 20 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்வில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தும் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வேறு மாதிரியான நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாக்கிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட வெளி நாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று, சென்னை அண்ணா அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்ற "தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!" - சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவையும் முதலமைச்சர் படித்துப் பார்த்து சட்டம் இயற்ற ஆவண செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளர் அவர்களிடம் இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் சி. பிரகாசு பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.