வதந்திகளை நம்ப வேண்டாம்.. மீன்களில் ரசாயன கலப்பு இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் மீன்களில் எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மீன்களில் எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காசிமேட்டில் மனித உடலை பதப்படுத்தும் பார்மலின் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீன் விற்பனையும் பெரிய அளவில் குறைந்தது. காசிமேடு மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த புகாரில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றுள்ளார்.
தமிழகத்தில் மீன்களில் ரசாயன கலப்பு இல்லை. பார்மலின் போன்ற எந்த ரசாயனமும் மீன்களில் கலக்கப்படவில்லை. ஐஸ்கட்டிகளை மட்டுமே பதப்படுத்த பயன்படுத்துகிறோம்.
மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். யாரும் மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாக இருக்கிறது. இது வதந்தி என்பதை மக்கள் உணர வேண்டும்.
மீன் மிகவும் நல்ல ஆரோக்கியமான உணவு. மீன் உணவு உடலில் பல நோய்களை குணப்படுத்தும். மீன் இதயத்திற்கு நல்லது. மக்கள் எல்லோரும் மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலை.யில் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.