கட்சி தொடங்குவதன் சிக்கல்கள் தெரியும் : தங்க தமிழ்ச்செல்வனுக்கு டி.டி.வி தினகரன் பதில்
தனிக்கட்சி தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள் எனக்குத் தெரியும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
கரூர்: கரூரில் கோவில் ஒன்றில் வழிபாடு நடத்திய டி.டி.வி தினகரன், தனிக்கட்சி தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள் எனக்குத் தெரியும். அதுகுறித்து தான் தற்போது ஆலோசித்து வருகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து டி.டி.வி தினகரன் பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில், கரூரில் உள்ள சதாசிவ பிரமேந்திராள் கோவிலில் இன்று தினகரன் வழிபாடு நடத்தினார்.
அவரோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட டி.டி.வி தினகரன் ஆதரவாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். வழிபாடு முடித்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இரட்டை இலையும், அதிமுகவும்
அப்போது, அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் பெறுவதற்கான எங்கள் போராட்டம் தொடரும். ஆனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியற்றை எதிர்கொள்ள எங்களுக்கு கட்சியும் சின்னமும் தேவை. அதற்கு முதல் கட்டமாக அ.தி.மு.க. அம்மா அணி என்று செயல்படுவதற்கு கோர்ட்டில் மனு செய்ய உள்ளோம். அதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
90% அதிமுக தொண்டர்கள்
அதை நீதிமன்றம் அனுமதித்தால் அ.தி.மு.க. அம்மா அணி என்று செயல்படுவோம். அதனை நீங்கள் தனிக்கட்சி என்று எடுத்துக்கொண்டாலும் சரி, தனி அணி என்று எடுத்துக் கொண்டாலும் சரி. அணி என்றாலும் அது கட்சி தான். கோர்ட்டு அனுமதி வழங்காத பட்சத்தில் அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்வோம். அதிமுகவின் 90 % தொண்டர்களின் பலம் எங்களிடம் உள்ளது. அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்
புதிய கட்சி ஆரம்பிப்பதில் இருக்கும் சிக்கல்கள் எனக்குத் தெரியும். நான் கட்சி ஆரம்பித்தால் தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் அதில் இருக்க முடியாது. ஏனென்றால், ஏற்கனவே அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். தனிக்கட்சி ஆரம்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் 18 பேரும் சசிகலா தலைமையில் செயல்படுவார்கள். அதில் எந்த தவறும் இல்லை. என்னையும் அவர்கள் ஆதரிப்பார்கள்.
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் நிலை
தனிக்கட்சி ஆரம்பித்தாலும் இரட்டை இலை சின்னம், கட்சியை மீட்பது தான் எனது முக்கிய நோக்கம். ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வில் பெயரளவுக்குத்தான் இயங்க முடியும். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அதுகுறித்து எதையும் இப்போது விரிவாக சொல்ல முடியாது. ஆனால், விரைவில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
நாங்கள் ஆதரிக்க முடியாது
டி.டி.வி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.,க்களும் தற்போது தினகரனை ஆதரித்து வருகிறோம். ஆனால், அவர் தனிக்கட்சி தொடங்கினால் அவரை எங்களால் ஆதரிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.