அரசியல்வாதிகளே இதைச் செய்யுங்கள்.. உங்கள் மக்களுக்காக.. வாசகரின் உருக்கமான கோரிக்கை!
சென்னை: வரும் பொதுத் தேர்தலில் அரசியல்வாதிகள் இதைச் செய்ய வேண்டும். நமது மாநிலத்தின் வளத்திற்கும், நலனுக்கும் இதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நமது அரசியல்வாதிகள் உள்ளனர். மக்களுக்காக இதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நமது வாசகர் அல்லூர் ஆர். திருவேங்கடம் கூறியுள்ளார்.
திருச்சி, தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த நமது வாசகர் அல்லூர் ஆர். திருவேங்கடம் இதுதொடர்பாக அனுப்பியுள்ள ஒரு கட்டுரை:
ஒரு மாநிலத்தின் அமைச்சர் டாஸ்மாக் வருவாயால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் போடப்படுகிறது என்று சொன்னால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தேர்தல் வரும்போது சில கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடுவது என்கிறார்கள். அவர்கள் எப்படி சம்பளம் போடுவார்கள்? ஒருவேளை எல்லோரும் குடிப்பதை நிறுத்தி விட்டால் பள்ளிகள் இயங்காதா?
ஒரு கூலித்தொழிலாளி தன் வருமானத்தில் ஒரு பகுதியை டாஸ்மாக்கில் கொடுத்து அரசு ஊழியரான ஆசிரியர்களுக்கே சம்பளம் போட்டால்அப்போ அவர் யார்? ஒருவேலை அமைச்சர் கூறியது உண்மை என்று வைத்து கொள்வோம் அவர் கூறியது தவறில்லை என்றாலும் இத்தனை வருடம் ஆண்ட திராவிட கட்சிகளின் பலன் இதுதானா? மேலும் பல தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுகிறது அது எப்படி?
நல்லவேளை மகாத்மா காந்தி, கக்கன், காமராசர் அப்துல் கலாம் இவர்களெல்லாம் இல்லை.
தமிழக அரசியல்வாதிகளுக்கு பணிவான வேண்டுகோள். வரும் தேர்தலிலாவது நல்ல வாக்குறுதிகளை கொடுத்து தமிழ் நாட்டை மீட்டு எடுங்கள். உங்கள் போட்டி அரசியலை கையில் எடுத்து மிக கேவலமான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர துடிக்காதீர்கள்.
ஏற்கனவே பல இலவச அறிவிப்புகளையும் ஒட்டுக்கு பணமும் கொடுத்துதான் எல்லோர் தலையிலும் கடன் சுமை. காசு போட்டு காசு எடுக்கிற பிசனஸ் என்று நினைத்து அரசியல் செய்கிறார்கள். சேவை மனப்பான்மையோடு அரசியல் செய்தால் தமிழ்நாடு முன்னேறும்.
ஒரு மாநிலத்தின் வருமானம் என்பது ஒன்று வரிகளின் மூலம் இருக்கலாம் அல்லது தொழிற்சாலை அல்லது விவசாயம். ஆனால் டாஸ்மாக் மற்றும் மணல் அள்ளுவதன் மூலம் தான் என்றால் அது வளர்ச்சி அல்ல, தளர்ச்சி.
500, 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தாது மணல் ஆற்று மணல் தண்ணீர் இவை பறி போவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடியுமே தவிர தடுக்க முடியாது.
தேர்தல் தேதி அறிவித்தவுடனே மத்திய ரிசர்வ் படை தமிழக காவல் துறை தாசில்தார் தேர்தல் அலுவலர் என்று பலரை குவிப்பார்கள். ஆனால் தேர்தல் முதல் நாள்வரை பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடரத்தான் செய்கிறது. இதைத் தடுக்க என்ன வழி?
தப்பு செய்யும் அரசியல்வாதிகளை அரசியலை விட்டே துரத்த வேண்டும். அதற்கான சக்தியும், அதிகாரமும், சட்ட துணையும் மக்களது கையில் இருக்க வேண்டும்.