'அவுட் சோர்சிங்' முறையில் வளர்க்கப்படும் பன்றிகளால் தர்மபுரிவாசிகள் அவதி!
தர்மபுரி: தர்மபுரி பகுதியில் பன்றிகள் அவுட் சோர்சிங் முறையில் வளர்க்கப்படுவதால் மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளனர்.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம், நெசவாளர் காலனி, அரசு மருத்துவமனை, பிடமனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. பன்றி தொல்லையால் இப்பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்க யாரும் முன்வருவதில்லை.
நகராட்சி நிர்வாகம் பன்றிகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனம் காட்டி வருகிறது. இதனிடையே தர்மபுரியில் அவுட்சோர்சிங் முறையில் 2 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நகராட்சி ஊழியர்களும் துணை போகின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மபுரியில், அவுட் சோர்சிங் முறையில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்படி பன்றிகளை வாங்குபவர், அதை வளர்ப்பதற்காக, வேறு ஒருவரிடம் ஒப்படைக்கிறார். பன்றிகள் வளர்ந்து விற்பனையானதும், அந்த தொகையை இருவரும் சரி பாதியாக பிரித்து கொள்கின்றனர்.
இந்த அவுட்சோர்சிங் முறைக்கு நகராட்சி ஊழியர்கள் ஆதரவளிப்பதனுடன், அவர்களில் சிலரே பன்றிகளையும் வளர்க்கின்றனர். இதை தட்டி கேட்டால், நகரின் துப்புரவு பணிகள் பாதிக்கப்படும் என அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றனர். சுகாதாரத்தை பேணி காக்க, ரோட்டில் சுற்றி திரியும் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்னை குறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் கூறியதாவது: பிடமனேரி உள்ளிட்ட வெளி இடங்களில் வளர்க்கப்படும் பன்றிகள், நகரின் காலி இடங்களில் உள்ள புதர்களில் பதுங்கி விடுகின்றன. இதனால் பன்றிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது தவிர முன்பு போல பன்றிகளை சுட்டு பிடிக்க முடியாது என்பதால், பன்றி வளர்ப்போருக்கு நோட்டீஸ் கொடுத்து வருகிறோம். நகராட்சி பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பன்றி வளர்க்க உதவி செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.