சங்கரராமன் கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்க வைத்துவிட்டனர்: புதுவை துணைநிலை ஆளுநர் கட்டாரியா காட்டம்!
புதுச்சேரி: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில் தம்மை வேண்டுமென்றே சிக்க வைத்து விட்டனர் என்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கூறியுள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த கட்டாரியா திடீர் என டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பல்வேறு பிரச்னைகளில் கட்டாரியாவுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார் என முதல்வர் புகார் கூறினார். அதே போல பதிலுக்கு துணைநிலை ஆளுநர் கட்டாரியாவும் புகார் தெரிவித்து வந்தார்.
டிஸ்மிஸ்..
இந்நிலையில் கட்டாரியாவை கடந்த 11-ஆம் தேதி டிஸ்மிஸ் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வீரேந்திர கட்டாரியா நேற்று கூறியதாவது:
பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான ஆணை வந்த பிறகு, கடந்த 13-ஆம் தேதியன்றே நான் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளதாக தலைமைச் செயலர் சேட்டன் பி சாங்கி தெரிவித்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன்.
ரவுடிகள் தொல்லை..
நான் 17-ஆம் தேதி வரை தங்கலாம். வரும் 19-ஆம் தேதிதான் புதிய ஆளுநர் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் நீக்கப்பட்டதற்கு புதுவை அரசின் நிர்ப்பந்தம் தான் காரணம். நான் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டேன். நான் புதுவை வந்தபோது இங்கு ரவுடிகள் தொல்லை அதிக அளவில் இருந்தது.
ஊழல் அரசு
சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. அரசு செயல்படுத்த வேண்டிய நடைமுறைகளை பரிந்துரைத்தேன். அதனால்தான் அவர்களுக்கும் எனக்கும் ஒத்துப் போகவில்லை. ஊழல் புரிவதே புதுவை அரசின் மந்திரமாக இருந்தது.
அதில் என்னையும் இணைக்கப் பார்த்தனர். முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு இடைஞ்சலாக இருந்தேன். புறப்படும் முன் அனைத்து விஷயங்களையும் ஓரிரு நாளில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்பேன்.
சங்கரராமன் கொலை வழக்கு
எனக்கு அனுப்பப்பட்ட கோப்பில் சங்கரராமன் கொலை வழக்கு என்று தெரிவிக்கவில்லை. கொலை வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவே கோப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்வர், தலைமைச் செயலர், சட்டத் துறையினர் கையெழுத்திட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட பிறகு நான் அதில் கையெழுத்திடத்தானே வேண்டும். இதில் நான் சிக்க வைக்கப்பட்டேன்.
கையெழுத்திட மறுத்தால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வழக்கு விவரத்தை இவர்கள் என்னிடம் முழுதாக தெரிவிக்கவேயில்லை.
தனிப்பட்ட முறையில் நான் இவ்வழக்குப் பற்றி கூறினால், சங்கராச்சாரியார் ஓர் அப்பாவி. அரசியல் காரணங்களுக்காகத்தான் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வீரேந்திர கட்டாரியா கூறினார்.