சென்னை வியாசர்பாடி அருகே சாலையில் திடீர் பள்ளம்.. மக்கள் பீதி!
சென்னை: பெரம்பூரை அடுத்த வியாசர்பாடி அருகே சாலையில் திடீரென பள்ளம் தோன்றியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூரை அடுத்த வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள மணலி சாலையில் நேற்று மதியம் திடீரென சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. சுமார் 4 அடி அகலம், 5 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பள்ளத்துக்கு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சாலையோரமாக சென்றன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளத்துக்குள் இறங்கி, திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் மண் கொட்டி சரி செய்யப்பட்டது. பூமிக்கு அடியில் உள்ள பயன்படுத்தப்படாத பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு மண் சரிந்ததால் தான் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.