தூத்துக்குடி மேயர் தேர்தல்: 408 வாக்குச் சாவடிகளில் 195 சாவடிகள் பதற்றமானவை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடக்கும் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்கும் 408 ஓட்டுச்சாவடிகளில் 195 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை, என அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் மேயர், மாநகராட்சி வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உட்பட 20 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்துவிட்டது.
இது மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் அதிகாரியுமான ரவிக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் வெளியேற வேண்டும். அதனை மீறி தங்கியிருப்பவர்கள் குறித்து போலீசார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.
கேமரா கண்காணிப்பு
408 ஒட்டுச்சாவடிகளில் 195 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை, என கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஓட்டுச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
பாதுகாப்பு பணியில்
ஒரு ஓட்டுச்சாவடியில் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பதற்றமான ஓட்டு சாவடிகளில் இரு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
போலீஸ் கண்காணிப்பு
எஸ்.பி., தலைமையில் ஒரு அதிரடிப்படையும், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ஏழு அதிரடிப்படையும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 23 அதிரப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 681 போலீசாரும், 168 ஹோம் கார்டுகள் உட்பட 849 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
16 வகை ஆவணங்கள்
வாக்குப்பதிவு அமைதியாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பூத் சிலிப் வைத்திருப்பவர்கள் ஓட்டுப்பதிவு செய்யலாம். இல்லாதவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 16 வகையான ஆவணங்களில் ஒன்றை கொண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்யலாம்.
விடுமுறை
இடைத்தேர்தலில் 20 பதவிகளுக்கு 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3லட்சத்து 48 ஆயிரத்து 154 பேர் ஓட்டுப்போடவுள்ளனர். ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 17, 18 ஆகிய நாட்களில் தேர்வுகள் மாற்று தேதிகளில் நடத்தப்படும், என அவர் தெரிவித்தார். முன்னதாக அவர் சைக்கிளில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரசாரம் மேற்க்கொண்டார்.