டிவி சேனல்களில் பாம்பு... பேய்கள் ஆதிக்கம்... பைரவி, நாகினியை நிறுத்தக் கோரி குவியும் புகார்கள்
சென்னை: தொலைக்காட்சி சேனல்களில் ஒருபக்கம் இச்சாதாரி பாம்புகள் படமெடுத்து ஆடினால் மறுபக்கம் பைரவி என்ற ஆவிகளுக்குப் பிரியமானவளும், மாயமோகினிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது போன்ற மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தக்கோரி புகார்கள் குவிந்து வருகின்றன.
மாமியார், மருமகள், அண்ணி, நாத்தனார் குடும்ப சண்டைகளை விட பாம்பு, பேய்களினால் டிஆர்பியும் அதிகரித்து விட்டது. இதனால் குடும்ப சீரியல்களின் இடையேயும் குட்டிச்சாத்தான்கள், சின்னச் சின்ன ஆவிகள் உலா வருகின்றன.
சமீப காலமாக தொலைக்காட்சி களில் மூடநம்பிக்கையை வளர்க் கும் தொடர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசிடம் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அப்புகார்களை ஒலிபரப்பு உள்ளடக்கம் புகார்கள் கவுன்சிலுக்கு (பிசிசிசி) மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவியும் புகார்கள்
தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்கள் மொத்தம் 10 வகையாக பிரிக்கப்படுகின்றன. சமூகநலன், மதச்சார்பின்மை, குழந்தைகளுக்கு எதிரானவை, தேசவிரோதம், நிறவேற்றுமை, ஆபாசம், முத்தக்காட்சிகள், நிர்வாணம், கலவரம், கிரைம் என இவை அனைத்தின் மீதும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வருகின்றன.
மூட நம்பிக்கைகள் அதிகம்
இப்புகார்களில் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் கலவரம் தொடர்பான புகார்கள் இதுவரை அதிகம் இருந்தன. ஆனால் தற்போது திகில், மந்திர தந்திரங்கள், பேய், பில்லி சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது தற்போது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.
கடுமையான நடவடிக்கை
இந்த வகையில் ஆகஸ்ட் 31 வரை அரசுக்கு வந்த 1,850 புகார்களில் 1,250 புகார்கள் மூடநம்பிக்கை தொடர்பாக உள்ளன. இதையடுத்து இவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி பிசிசிசிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.
நாகினி
மூடநம்பிக்கை தொடர்கள் மீதான புகார்கள் அனைத்து மொழி தொலைக்காட்சிகள் மீதும் உள்ளன. இத்தொடர்கள் அனைத்தும் பிரபலமானவையாக, அதிக பார்வையாளர்களை கொண்டவையாக உள்ளன. தமிழில் பைரவி, நாகினி உள்ளிட்ட தொடர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.
ஜீ தமிழ் சேனல்
இந்தியில் ஜீ சேனலில் வெளியாகும் தொடர்கள் மீதே அதிக புகார்கள் உள்ளன. இந்த தொடர்கள் பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மற்றும் பிராந்திய தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன. ஜீ தமிழ் சேனலில் பாம்பு சீரியல் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது.
பல்லாயிரக்கணக்கான புகார்கள்
தொலைகாட்சி தொடர்கள் மீது அரசுக்கு புகார்கள் வருவது இது புதிதல்ல. இதற்கு முன் கடந்த 2014, ஜூலை 3 முதல் 2015, ஆகஸ்ட் 22 வரை 4,545 புகார்கள் பெறப்பட்டன. பிசிசிசிக்கு அனுப்பப்பட்ட இவற்றில், 11 சதவீதம் மட்டுமே மூடநம்பிக்கை தொடர்களுக்கு எதிரானவை.
நடவடிக்கையில்லை
இப்புகார்கள் மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு அறிவுறுத்தி பிசிசிசி அமைப்பு பொதுவான அறிவிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது.
பிசிசிசி சார்பில் இதுபோன்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், யார் மீதும் இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தொடரும் சீரியல்கள்
இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாகினிக்கு கிடைத்த வரவேற்பையும், டிஆர்பி ரேட்டிங்கையும் பார்த்து பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்கிறது சன்டிவி. பைரவியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. பிசிசிசி அறிக்கை விட்ட பின்னர்தான் இதுபோன்ற சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகின்றன.
அதிகாரம் இருக்கிறதா?
பிசிசிசி அமைப்பானது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. தங்களுக்குள் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் அமைப்பாக இது இருந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே மூடநம்பிக்கை தொடர்களை தடை செய்வது மிகவும் கடினம். மேலும் இந்த விஷயத் தில் அரசு இதுவரை சட்ட ரீதியிலான நடவடிக்கை எதுவும் அமல்படுத்தவில்லை என்று தனியார் சேனல் அமைப்பினர் கூறி வருகின்றனர்.