பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 300 கைதிகள் ஜெ. பிறந்தநாளில் விடுதலை?
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 300 கைதிகள் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனைகாலத்தை நிறைவு செய்த 300 கைதிகள் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தற்போது சுமார் 1800 தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ஆணையில், தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாசம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை சட்டம் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனை அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த நிபந்தனைகளுடன் கைதிகளின் பட்டியலைத் தயார் செய்து வரும் 10ம் தேதிக்குள் அனுப்பும்படி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சுக்லா அனைத்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி தமிழக சிறையில் உள்ள கைதிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அரசு நிபந்தனைப்படி, விதிகளின்படி 10 ஆண்டு சிறை தண்டனை முடிந்த சுமார் 300 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாளை சிறையில் இருந்துதான் அதிக அளவில் கைதிகள் விடுதலை ஆவார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது.