கமல் அரசியலுக்கு வர இதுதான் தக்க தருணம்.. ஓவியா பரபர பேட்டி
நடிகர் கமல்ஹாசன் அரசியலை மக்கள் சேவைக்களமாக பார்ப்பார் எனவே அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆதரவு அளிப்பேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை : நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆதரவளிப்பேன் என்று பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏற்றவர் கமல் என்பது தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் பிக்பாஸ் புகழ் ஓவியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கும் சமூகத்திற்கும் எப்போதுமே ஒரு சண்டை போய்க்கொண்டே இருக்கும். ஏனெனில் என்னுடைய உலகத்தில் நான் சந்தோஷமாக இருப்பேன். நான் செய்வதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். என் மனதில் என்ன சரி என்று படுகிறதோ அதைச் செய்வேன்.
இப்போதும் கூட மக்கள் என்னைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்று நான் நினைக்கவே மாட்டேன். அது தான் என்னுடைய மிகப்பெரிய வெற்றி என நினைக்கிறேன். எனக்கு பயம் கிடையாது.
அரசியல் நல்ல தளம்
அரசியல் என்பது வேலை கிடையாது, மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் ஒரு நல்ல தளம். அதை நிறைய பேர் புகழ், பணத்திற்காக தவறாக பயன்படுத்துகின்றனர். கமல்ஹாசன் ஏன் எனக்கு பிடிக்கும் என்றால், அவர் முதலில் ஒரு நல்ல மனிதர் மற்றவர்களையும் அப்படித் தான் பார்க்கிறார். அப்படிப்பட்டவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். அவருக்கு இப்போது புகழ் தேவையில்லை, பணமும் அவரிடம் இருக்கிறது.
நிச்சயம் ஆதரவு
எனவே அவர் அரசியலுக்கு வருவதற்கான நோக்கம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு நன்றாக தெரிகிறது. அவரது கட்சிக்காக அல்ல அவர் சிறந்த மனிதர் என்பதற்காக கமல்ஹாசனுக்கு நான் நிச்சயம் ஆதரவு அளிப்பேன்.
சரியான சமயம்
சினிமாவை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். அதன் அம்சம் சமூகத்தில் பிரதிபலிப்பதில்லை, ஆனால் அரசியலுக்கு கமல்ஹாசன் வருகிறார் என்றால் இது சரியான தருணம் என்று தான் நான் நினைக்கிறேன். அவருக்கு அதற்கான திறமை உள்ளது.
அன்புக்கு நன்றி
ஓவியா ஆர்மியாக இருந்தது, இப்போது ஓவியா ஃபேமிலி ஆகிவிட்டது. மக்களின் அன்புக்கு மிகவும் நன்றி, ஆனால் என்னை முதல்வர் என்றெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்த வேண்டாம், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, அரசியல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.
வரும் வாய்ப்பில் நடிக்கிறேன்
ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் இப்போது பட வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் விரும்பியே கதையை தேர்ந்தெடுத்து ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். ரசிகர்கள் இருக்கிறார்கள், கிடைத்ததை அள்ளலாம் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது, நான் யாரிடமும் வாய்ப்பு தேடி சென்றதில்லை, எனக்கு வரும் படவாய்ப்புகளை செய்கிறேன். நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை என்று நடிகை ஓவியா தெரிவித்தார்.