தவறு செய்திருந்தால்... சென்னை சில்க்ஸ் உரிமையாளர், சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு தண்டனை.. ஜெயக்குமார்
சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் விதிகளை மீறி இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : தி.நகர் தீவிபத்தில் சிக்கியுள்ள சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் விதிகளை மீறி இருந்தால் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், " தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறாரகள். போர்க்கால அடிப்படையில் தீவிபத்தில் சிக்கியுள்ள கட்டடத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை சில்க்ஸ் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்தால் அதன் உரிமையாளர் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் என்று யாராக இருந்தாலும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு யார் யாரெல்லாம் துணையாக இருந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு விதிகள் மீறல் இருக்கும் பட்சத்தில் சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும். அணையாத தீயால் சூழ்ந்துள்ள கரும்புகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும்." என்று தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் 15 வாகனங்களில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'வஜ்ரா' வாகனம் இரண்டும் கொண்டு வரப்பட்டு தண்ணீர் பீய்ச்சியடித்து தீ அணைப்புப் பணி நடந்து வருகிறது.
13 மணி நேரம் ஆகியும் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து கடையின் உட்பகுதி எரிந்துகொண்டு இருக்கிறது. இதனால் தீவிபத்தை வேடிக்கைப் பார்க்க பொதுமக்கள் கூடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.