"ரெய்டு" கேப்பில் ப. சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளராக்கிய கராத்தே தியாகராஜன்- திமுக- காங். ஷாக்
சிபிஐ ரெய்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், ப. சிதம்பரம்தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என ஒரேபோடாக போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சிபிஐ சோதனை குறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன் சந்தடி சாக்கில் ப.சிதம்பரம்தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இவர்களுக்கு சொந்தமான நாடு முழுவதும் 12 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது. இச்சோதனைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கராத்தே தியாகராஜன்
இதனிடையே ப. சிதம்பரம் வீட்டுக்கு அவரது தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் இன்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க கூடாது என்பதற்கான மறைமுக மிரட்டலே ப.சிதம்பரம் வீடுகளில் நடைபெறும் சோதனை என குறிப்பிட்டார்.
கொளுத்திப் போட்ட கராத்தே
ரஜினியின் தனிக்கட்சிக்கும் ப.சிதம்பரம் வீட்டுக்குமான தொடர்பு என்ன என்பது கராத்தே தியாகுவுக்குதான் வெளிச்சம். அத்துடன் நிற்காமல் இன்னொன்றையும் கராத்தே கொளுத்திப் போட்டார்.
முதல்வர் வேட்பாளர் சிதம்பரம்
அதாவது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ப.சிதம்பரம் உருவெடுத்திருக்கும் நிலையில் இந்த சோதனை நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்றார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது.
திமுக- காங். தலைவர்கள் அதிர்ச்சி
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஓரிரு மாதங்களில் சிதம்பரம் பொறுப்பேற்க இருக்கிறார். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளர் என கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியால் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.