ராஜீவ் காந்தி நினைவுநாள் நிகழ்ச்சி... ப.சிதம்பரம் கோஷ்டிக்கு தடை போட்ட திருநாவுக்கரசர்!
சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த ப.சிதம்பரம் தரப்புக்கு திருநாவுக்கரசர் அனுமதி மறுத்தது பெரும் பிரளயத்தை கிளப்பி வருகிறது.
சென்னை: ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் ப.சிதம்பரம் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த திருநாவுக்கரசர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே எதிர்ப்புகள்தான். முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திருநாவுக்கரசை வறுத்தெடுத்து விடுகிறார்.
யார் திருநாவுக்கரசர்?
இதில், திருநாவுக்கரசர் யார் என கேள்வி எழுப்பி அடடே போட வைத்தார் இளங்கோவன். இதற்கும் திருநாவுக்கரசர் தமக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்து வந்தார்.
ராஜீவ் நினைவு தினம்
இதனிடையே ராஜீவ்காந்தி நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வழக்கமாக ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொல்லப்பட்ட இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை சம்பிராதயமாக சத்தியமூர்த்தி பவனில் மட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ப.சி. நிகழ்ச்சிக்கு தடை
அதேநேரத்தில் ராஜீவ்காந்தி புகழ்பாடும் பட்டிமன்றம் ஒன்றுக்கு ப.சிதம்பரம் தரப்பு திட்டமிட்டது. ஆனால் சத்தியமூர்த்தி பவனில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு திருநாவுக்கரசர் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ப.சி ஆதரவாளர்கள் அதிருப்தி
இதனால் திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக விரைவில் ப. சிதம்பரம் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வருவதால்தான் தமது எதிர்ப்பை இப்படி திருநாவுக்கரசர் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.