எனது வீட்டு சமையலறை, படுக்கையறையிலும் அமலாக்கத்துறை சோதனை: ப.சிதம்பரம்
சென்னை, டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
டெல்லி : சென்னை, டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படாமல் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திலேயே இந்த சோதனையானது முடிந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது : ஏர்செல் மேக்சிஸ் வழக்கு எப்போதோ தொடரப்பட்டது, நேற்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
வழக்கில் தொடர்புடையவர்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாராம்சமே இது வரை போலீசாரோ, சிபிஐயோ எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை.
அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது
குற்றம் புரிந்ததற்கான எந்த வழக்கும் சிபிஐ உள்ளிட்ட எந்த அமைப்பாலும் தொடரப்பட வில்லை. எனவே வழக்கே பதிவு செய்யாத நிலையில், சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
எதிர்ப்பை பதிவு செய்தேன்
அமலாக்கத்துறை திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்தியுள்ளது. சென்னையில் இன்று கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், சோதனை நடத்துவதை பற்றி எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனாலும் இது சரியான நடைமுறை இல்லை என்று என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்.
ஆவணங்கள் கைப்பற்றவில்லை
என்னுடைய வீட்டில் சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். எந்த ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.