தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி.. இந்த இரு முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு இருக்குதாம்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தலைவர் பதவி கோதாவில் குதித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொரு முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரும் போட்டியிலுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமாக தோற்ற நிலையில், காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவன் கடந்த மாதம் 15ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், புதிய தலைவரை கட்சி மேலிடம் இன்னும் நியமிக்கவில்லை.
எனவே தலைவர் பதவியை கைப்பற்ற முன்னணி தலைவர்கள் லாபி செய்து வருகிறார்கள்.
தலைவர் பதவிக்கான போட்டியில், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்த குமார், மாணிக்தாகூர், விஜயதாரணி, எம்.எல்.ஏ., கோபிநாத், செல்லக்குமார் ஆகிய 8 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்கள். கராத்தே தியாகராஜன், நேரடியாக சோனியாவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தலைவர் பதவி கோதாவில் குதித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ப.சிதம்பரம் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
ப.சிதம்பரத்தின் அரசியல் அனுபவம், மேடை பேச்சு திறன் போன்றவை காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்க உதவும் என்று கட்சி மேலிடம் யோசிக்கிறதாம்.
அதேநேரம், ராஜ்யசபா எம்.பியாக ஆளும் கட்சிக்கு எதிராக குரல் தர வேண்டிய முக்கிய பொறுப்பு சிதம்பரத்திற்கு உள்ள நிலையில், அவரை தமிழகத்திற்குள் மட்டும் வைத்திருப்பது சரியிருக்காது என்ற எண்ணமும் மேலிடத்திற்கு உள்ளது. இது ஒன்றுதான், சிதம்பரத்திற்கு தலைவர் பதவி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலாகும்.
தலைவர் பதவிக்கான ரேசில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தேசிய செயலாளருமான திருநாவுக்கரசரும் உள்ளார். அவருக்கு நாளை 67 வயது பிறக்கிறது. இதையொட்டி அவரது பிறந்த நாளை காங்கிரஸ் தொண்டர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கி கொண்டாடுகிறார்கள். இதை பிரமாண்டமாக நடத்தி மேலிட கவனத்தை ஈர்ப்பது அவர்கள் நோக்கம்.
அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும் காலை உணவும் வழங்கப்படுகிறது. அரும்பாக்கம் க. வீரபாண்டியன் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திருவேற்காடு உதவும் கரங்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
டி.பி சத்திரத்தில் உள்ள பாலவிகாஸ் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. டேனியல் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு கராத்தே ரவி மதிய உணவு வழங்குகிறார்.
புரசைவாக்கத்தில் உள்ள இந்தியன் பீஸ் மிஷனில் உள்ள 500 குழந்தைகளுக்கு காங்கிரஸ் சட்டத்துறை மாநில துணை தலைவர் சா.கலைப்புனிதன் காலை உணவு வழங்குகிறார்.
மாவட்ட துணை தலைவர் ஐ.ஜமால் ஏற்பாட்டில் மவுண்ட்ரோடு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இனிப்பு வழங்கப்படுகிறது. முகப்பேர் சின்ன திருப்பதி வெங்கடேஸ்வரா திருக்கோவிலில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.முரளி தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
இதுபோல பல வழிபாட்டிடங்களிலும் பூஜைகள் செய்யப்பட உள்ளன. விழாவை தடபுடலாக நடத்தி தனக்கிருக்கும் செல்வாக்கை மேலிடத்திற்கு காண்பிக்க திருநாவுக்கரசர் தனது பிறந்த நாளை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வார் என்று நம்பலாம்.