ஜெயலலிதா உடல் நிலை.. அப்பல்லோவுக்குச் சென்று விசாரித்தார் பழ.நெடுமாறன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இன்று சென்றார்.
தமிழக முதல்வர் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க முடியாவிட்டாலும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து அதிமுக மூத்த தலைவர்களிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு பழ. நெடுமாறன் சென்றார். அங்கு அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் அவரது உடல் நிலை தேறி வருவதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.