காவிரிக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் நடத்த வருவாரா ரஜினிகாந்த்.. பி.ஆர். பாண்டியன் பலே கேள்வி
காவிரி நதி நீரைப் பெற்றுத் தர தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நடிகர் ரஜினிகாந்த் வருவாரா என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5 நாட்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
கண்டனம்
இந்நிலையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனும் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது என்று கூறினார்.
காவிரி பிரச்சனை
மேலும், தமிழகத்துக்கு காவிரி பிரச்னையில், மத்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்ததால் 400 விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணமடைந்துள்ளனர். காவிரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீரை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், மத்திய அரசு பெற்று தர மறுத்து விட்டது என்று பி. ஆர். பாண்டியன் குற்றம்சாட்டினார்.
உண்ணாவிரதப் போராட்டம்
தமிழக விவசாயிகள், விவசாயத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்பட்டுள்ளதை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று பாண்டியன் தெரிவித்தார்.
ரஜினிக்கு எதிர்ப்பு
அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பி. ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பியதோடு கண்டனமும் தெரிவித்தார். காவிரி பிரச்சனைக்காக தஞ்சையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்க தயாரா என்றும் பி. பாண்டியன் கேள்வி எழுப்பினார்.