இன்னாது கடன் தள்ளுபடி ஃபேஷனாகி போச்சா.. வெங்கய்யாவை வெளுத்து கட்டிய பி. ஆர். பாண்டியன்
கடன் தள்ளுபடி என்பது ஃபேஷனாகிப் போச்சு என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதற்கு பி. ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடன் தள்ளுபடி கேட்பது ஃபேஷனாகி விட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கிண்டலடித்தார். இதற்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுவது அரசியல் அனுபவத்திற்கு அழகல்ல, உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் பி.ஆர். பாண்டியன் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கையால் விவசாயிகள் இந்தியா முழுவதும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டு மாண்டுள்ளனர்.
கடன் தள்ளுபடி சட்டவிரோதம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதில்லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அதே போன்று தள்ளுபடி செய்வதென்றால் மாநில அரசுகள் அதனை செய்யலாம் என்று கூறுவது அதைவிட மோசமானது.
காலம் வரும்
மத்திய அரசின் இதுபோன்ற செயலால் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் நிச்சயம் வரும் என்று எச்சரிக்கிறோம்.
விவசாயிளை சுட்டு கொலை
மத்திய பிரதேசத்தில் கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராடினார். அவர்களை ஈவு இரக்கமின்றி மத்திய அரசு துணையோடு அம்மாநில அரசு சுட்டுக் கொன்றது. இதில் 7 விவசாயிகளின் உயிர் பரிதாபமாக பலியாகியுள்ளது.
பிற மாநிலங்களில் கடன் தள்ளுபடி
மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இந்நிலையில், உயர்நீதிமன்றம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டும், தமிழக அரசு அதனை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஃபேஷனா..
அதனை திரும்ப பெற வலியுறுத்தி போராடும் விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாக கடன் தள்ளுபடி கேட்பது ஃபேஷனாகி விட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கிண்டலடித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மன்னிப்பு கேட்க வேண்டும்..
போராடும் விவசாயிகளை கிண்டல் செய்வதும், சுட்டு தள்ளுவதும் கொள்கையாக கொண்டுள்ள பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு போன்ற மூத்த தலைவர்கள் தாங்கள் பேசியதற்கு விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் அரசியல் அனுபவத்திற்கு இது அழகல்ல, உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
கறுப்புக் கொடி போராட்டம்
மனமுடைந்துள்ள விவசாயிகளை வார்த்தைகளால் தற்கொலைக்கு தூண்டாதீர்கள். இதுபோன்ற நடவடிக்கை தொடருமேயானால் சென்னையில் உள்ள வெங்கய்ய நாயுடு வீட்டை கருப்பு கொடியுடன் முற்றுகையிடுவோம் என்று பாண்டியன் கூறியுள்ளார்.