விவசாயி தற்கொலைக்கு தூண்டிய வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு.. பி.ஆர். பாண்டியன் ஆவேசம்
விவசாய சங்கத் தலைவரை கெட்டவார்த்தையில் பேசி அவமானப்படுத்தியதால் தற்கொலைக்கு தூண்டியதாக ஐஓபி வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார
சென்னை: நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன், ஐஓபி வங்கி அதிகாரி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
மாநில அரசு வறட்சி பாதித்த இடமாக அறிவித்துவிட்டாலே மாவட்ட நிர்வாகம் மூலமாக அந்தந்த வங்கிகளில் கடன் வசூலை ஒத்தி வைக்க வேண்டும். அதற்கான சுற்றறிக்கைகளை ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அனுப்ப வேண்டும் என்று 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்கிறது.
அதனை பின்பற்ற தமிழக அரசும் மறுக்கிறது. அதனை ஏற்று செயல்படுத்த வங்கி அதிகாரிகளும் மறுக்கிறார்கள். வங்கி அதிகாரிகள் மிக மோசமான முறையில் கடன் வசூல் என்ற பெயரில் அநாகரிக நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகளை அவமானப்படுத்துகிறார்கள்.
நெல்லை மானூரில் விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணனை அவமானப்படுத்திய ஐஓபி வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக அந்த அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
ஆந்திர அரசை பின்பற்றி, அரசு தொகையில் இருந்து ஈடு செய்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடன் வசூல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவரை 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் அருகில் மரணம் அடைந்த விவசாயிகளின் புகைப்படங்களை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி மத்திய அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மாநில அரசும் எங்களது கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்