ராம மோகனராவை தடுமாற வைத்த செய்தியாளரின் அந்த கேள்வி!
சேகர் ரெட்டி பற்றிய செய்தியாளர் கேள்விக்கு திணறிவிட்டார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், திடீரென இன்று பேட்டியளித்த அவர் செய்தியாளரின் ஒரு கேள்விக்கு திணறிவிட்டதை பார்க்க முடிந்தது.
ஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய விதம் சரியில்லை என ராம மோகன ராவ் ஆவேசமாக பேட்டியளித்து முடித்ததும், உங்களுக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்புள்ளதா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கும் சேகர் ரெட்டிக்கும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. எனக்கு தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான நண்பர்கள் உள்ளனர்,. என ஜாக்கிரதையாக கருத்து தெரிவித்தார் ராம மோகன ராவ்.
அதாவது 'தொழில் ரீதியாக' (மட்டும்) தனக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பதை அவ்வாறு ராம மோகன ராவ் கூறினார். மற்றபடி சாதாரண வகையில் தொடர்பு, அறிமுகம் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் அதை அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இதையடுத்து மற்றொரு கேள்வி எழுந்தது. ஜெயலலிதா மறைந்த நாளில், நீங்கள், சேகர் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசினீர்களாமே.. செய்தித்தாளில் செய்தி வந்துள்ளதே என்பது அந்த கேள்வி.
அதற்கு பதிலளித்த ராம மோகனராவ், நான் பேசியதற்கான ஆடியோ டேப் ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஜெயலலிதா இறந்த அன்று என்னை நிறைய பேர் போனில் தொடர்பு கொண்டார்கள். யார், யார் தொடர்பு கொண்டார்கள், யார் தொடர்பு கொள்ளவில்லை என்பதெல்லாம் நினைவில் இல்லை. தமிழகம் முழுக்கவிருந்து நிறைய பேர் என்னை போனில் தொடர்பு கொண்டார்கள். அப்படித்தானே தலைமைச் செயலாளரான நான கள நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும். என கூறிவிட்டார்.
எனவே சேகர் ரெட்டியுடன் ஒருவேளை ராமமோகன ராவ் அன்றைய தினம் பேசிய தொலைபேசி ஆதாரத்தை மத்திய அரசு காண்பித்தால் கூட, ஜெயலலிதா சாவு குறித்து விசாரிக்க போன் செய்ததாக கூறிவிட வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளார் ராம மோகனராவ்.