சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் பச்சமுத்து நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்
சென்னை: ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பச்சமுத்து நீதிமன்ற உத்தரவின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட்டார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைகழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக சுமார் 75 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கினார்.
அதன்படி டெபாசிட் தொகையாக ரூ75 கோடியை சைதாப்பேட்டை 11வது அமர்வு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. மேலும். மறு உத்தரவு வரும் வரை நாள்தோறும் விசாரணை அதிகாரி முன்பாக பச்சமுத்து ஆஜராக வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பாரிவேந்தர் தரப்பில், சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் 75 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 10 லட்சம் ரூபாயுடன் 2 நபருக்கான ஜாமீன் உத்தரவாதம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகளுக்கு பிறகு பாரிவேந்தர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலத்தில் விசாரணை அதிகாரி முன்பு பச்சமுத்து இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். இதேபோல் 15 நாட்கள் பச்சமுத்து கையெழுத்திட வேண்டும்.