ரூ. 10,000 கோடி பச்சமுத்து மீது 3 செக்ஷன்களில் வழக்கு!
சென்னை: எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மிகப் பெரிய கல்விக் குழுமமாக உயர்ந்து நிற்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். கல்வி மட்டுமல்லாமல், அரசியல், ஊடகம் என பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளவர் பச்சமுத்து.
கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி அளவுக்கு அவரது நிறுவனங்களுக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் பச்சமுத்து. அவர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரைக் கைது செய்த நடவடிக்கை கூட உயர்நீதிமன்றத்தின் தொடர் கண்டிப்பு மற்றும் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்தே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதன் காணாமல் போன விவகாரத்தில் இவர் மீதும் சர்ச்சைகள் வெடித்தன, புகார்கள் கிளம்பின. இந்தநிலையில் பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.