பண மோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி பச்சமுத்து மனு !
சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நிபந்தனையை தளர்த்தக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைகழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக சுமார் 75 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நான்கு நிபந்தனைகளுடன் கடந்த 8ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதன்படி டெபாசிட் தொகையாக ரூ75 கோடியை சைதாப்பேட்டை 11வது அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து செலுத்தி ஜாமீன் பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலத்தில் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி பச்சமுத்து கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி எஸ்ஆர்எம் பச்சமுத்து சார்பில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.