'இருமுகனாக' வலம்.. அங்கிட்டு பச்சமுத்து... இங்கிட்டு பாரிவேந்தர்
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக ரூ72 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து அரசியலுக்காக 'பாரிவேந்தர்' என்ற பெயருடன் வலம்வந்தவர்...
சாதாரண ஆசிரியராக வாழ்க்கையைத் தொடர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் குவித்தவர் பச்சமுத்து. பொறியியல், மருத்துவ கல்லூரிகளின் சீட்டுகளை வெளிமாநில மாணவர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் புகார் உண்டு.
ஏரிகள், புறம்போக்கு நிலங்களை முறைகேடு வளைத்து கல்வி நிறுவனங்களை பச்சமுத்து கட்டியுள்ளார் என்பதும் குற்றச்சாட்டு. பொதுவாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவராக 'பச்சமுத்து' என்ற பெயரை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் தம்முடைய இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் என சொல்லும்போது "பாரிவேந்தர்" என்ற மற்றொரு பெயரை பயன்படுத்தி வந்தார். எஸ்.ஆர்.எம். குழும ஊடகங்களிலும் "பாரிவேந்தர்' என்ற டீசண்ட் பெயரைத்தான் பயன்படுத்தினார்.
பார்க்கவ குல ஜாதி சங்கத்தை நடத்தியபோதும் 'பாரிவேந்தராக'வே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். இப்படி பொதுவாழ்க்கையில் "இருமுகனாக" வலம் வந்த பச்சமுத்து தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.