பச்சமுத்துவின் பயங்கர வளர்ச்சி.. 7 ரூபாயுடன் சென்னை வந்தவரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
சென்னை: 30 ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த கிராமமான சேலம் தாண்டவராயபுரத்தில் இருந்து வெறும் ஏழு ரூபாயுடன் சென்னைக்கு வந்துள்ளார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர். இப்போது அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி என்பதை பிறரால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மோசடி செய்ததாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர், பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இவரின் பின்னணி குறித்து ஒரு பார்வை: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் என்ற கிராமம்தான் பச்சமுத்துவின் சொந்த ஊர். தாயார் பெயர் வள்ளியம்மை. தந்தையார் பெயர் ராமசாமி.
பள்ளிப்படிப்பை ஆத்தூர் பள்ளியில் முடித்தார். இதன்பிறகு, திருச்சியில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் முதுகலையும் படித்துள்ளார்.
இதன்பிறகு வேலை தேடி அலைந்த பச்சமுத்து, டுடோரியல் கல்லூரிகள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆசிரியராக பகுதிநேர வேலை செய்தார்.
அப்போது கிடைத்த அனுபவத்தில் ஒரு விஷயத்தை கவனித்தார். சில மிஷனரிப் பள்ளிகளைத் தவிர, நல்ல வகையில் ஆங்கிலம் கற்றுத்தர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்ந்தார்.
இதையடுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி, 12 ஆண்டு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது.
அந்த நேரத்தில், இருந்த எம்.ஜி.ஆர் அரசு, தமிழகத்தில் கல்லூரிகள் நடத்தும் பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைத்தது. பச்சமுத்துவுக்கு அப்போதுதான் லக் அடித்தது.
1984-ம் ஆண்டு பாலிடெக்னிக், 1985ல் இன்ஜினீயரிங் கல்லூரி என திறந்துள்ளார். அதன்பிறகு பச்சமுத்து வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
1990ல் தனது தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவாக (Sri Ramasamy Memorial) எஸ்.ஆர்.எம் குழுமத்தை உருவாக்கியுள்ளார்.
பிறகு, ஆண்டுக்கு ஒரு கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார். ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. சில ஆண்டுகளில், ஒரே ஆண்டில் மூன்று கல்லூரி களைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். பின்னர், பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகத் துறையில் நுழைந்த பச்சமுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினார்.
இன்று அவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. 7 ரூபாயில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு வளர்ந்த அவரது வாழ்க்கை கவனிக்கத்தக்கது.