மாரியப்பன், சுனிதா சாலமன், டி.கே. மூர்த்தி உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்
சென்னை: நாட்டின் மதிப்பு மிக்க உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்:
தமிழகத்தில் 5 பேருக்கு பத்ம ஸ்ரீ
பாரலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன். ரியோவில் நடைபெற்ற பாரலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனிதி சாலமன். இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை முதன் முதலில் கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன்,74. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் டி.கே. மூர்த்தி, பேராசிரியர் மைக்கேல் டானினோ,சமூக சேவகி நிவேதிதா ரகுநாத் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
களறி பயிற்சியாளர்
கேரளாவை சேர்ந்த களறி பயிற்சியாளர் மீனாட்சி அம்மா. தன் வாழ்க்கையையே களறிக்காக அர்ப்பணித்தவர். வயதான பின்னரும் வாள் சுழற்றும் இவருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ பெறும் விளையாட்டு வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பார்வையற்றோர் அணியின் கேப்டன் சேகர் நாயக், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், வட்டு எறியும் வீரர் விகாஸ் கெளடா போன்றோர் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்கள்.
சமூக ஆர்வலர்கள் கலைஞர்கள்
சமூக சேவகி அனுராதா கொய்ராலா, மபூஷ்கர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், எழுத்தாளர் இலி அகமது, நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங். திரைப்பட பின்னணி பாடகி அனுராதா படுவால், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.