பாகிஸ்தான் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை செய்க: வாசன் வலியுறுத்தல்
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யும் சிமிண்ட்க்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்த
சென்னை: பாகிஸ்தான் சிமெண்ட் உட்பட அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளையும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
''இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய ஊடுருவல் ஜம்மு - காஷ்மீர் துப்பாக்கிச் சூடு, பயங்கரவாத பிரிவினைவாத செயல்கள் போன்றவற்றினால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு, வியாபாரம் நடைபெறாமல் பொருளாதாரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
அங்கு பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் போக்குவரத்து மூலம் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாதம் தோறும் சுமார் 10 லட்சம் மூட்டைகளில் பாகிஸ்தான் நாட்டு சிமெண்ட் இறக்குமதியாகிறது. இந்த சிமெண்ட்டின் தரம் நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் தரத்தை விட குறைவானது.
பாகிஸ்தான் சிமெண்ட் சென்னை கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தரம் குறைந்த சிமெண்டை பயன்படுத்தினால் கட்டிடம் சேதமடைந்து பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், பாகிஸ்தான் நாட்டின் சிமெண்ட்டை பயன்படுத்தும் போது நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் விற்பனை குறைந்துஇ பொருளாதார முன்னேற்றம் தடைபடும்.
எனவே இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்ல சுமூக நட்புறவு ஏற்படும் வரை பாகிஸ்தான் சிமெண்ட் உட்பட அந்நாட்டின் எந்த ஒரு பொருளும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும் என்று தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.