ஜன கன மன.. பாடுவது யார் என்று பார்த்தீர்களா??
Recommended Video
சென்னை: உலக மக்களின் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நிரூபணமாகி வருகிறது.
கிரிக்கெட் போட்டி என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. அதிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாட்டு மக்களிடன் நாடி நரம்புகளில் முறுக்கேறிவிடும். கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள்கூட, இந்தியா-பாகிஸ்தான் என்றால் யார் ஜெயித்தது என்ற கேள்வியைத்தான் ஆயிரம் ஆர்வத்துடன் கேட்பார்கள்.
ஒரு விளையாட்டு வினையாகவும், அரசியலாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும், விபரீதமாகவும், சகிப்புத்தன்மையற்றும் போனது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டில்தான் என்பதை கடந்த கால வரலாறுகள் பல சான்றுகளை எடுத்து போடுகிறது. ஒட்டி உறவாடி ஒன்றாக இருந்த மண்ணில் சிலரால் காலத்தின் கோலத்தால் பந்தாடப்பட்டு கிடக்கிறோம்.
அதிகரிக்கும் சகிப்புத்தன்மை
ஆனால் இதெல்லாம் காலப்போக்கில் குறையுமா, மாறுமா என தெரியவில்லை. சகிப்புத்தன்மை கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆம்! 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. 19ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. வழக்கம்போல எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிறைந்த மக்கள் மைதானத்தில் கூடி இருந்தனர்.
இந்தியாவின் தேசிய கீதம்
ரசிகர்களின் கூட்டம் மைதானத்தில் நிரம்பி வழிந்தது. சம்பிரதாயப்படி இரு நாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் நேரம் திடீரென்று ஒரு குரல் ஒரு கம்பீரமாக வெளிப்பட்டது. அது ஒரு பாகிஸ்தானிய ரசிகரிடமிருந்து வந்த குரல்.
பாகிஸ்தான் ரசிகர்
கறுப்பு நிற ஆடை அணிந்திருக்கிறார். கழுத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடியையும் அணிந்திருக்கிறார். அவர்தான் நமது இந்திய தேசிய கீதத்தை உருக்கமாகவும், சத்தமாகவும் கண்ணை மூடி பாடிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் பாகிஸ்தான் கொடி இருந்தது. ஆனாலும் அவர் அப்படி பாடியதை அவரே வீடியோவும் எடுத்து கொண்டார்.
அற்புதமான விளக்கம்
இதுகுறித்து அந்த இளைஞரிடமே கேட்கப்பட்டது. தன்னுடைய பெயர் அடில் தாஜ் என்றும், வீடியோ வைரலானதற்கு நன்றியும் தெரிவித்து கொண்டார். பின்னர், தான் அவ்வாறு பாடியதற்கு அவர் கூறிய விளக்கம் என்ன தெரியுமா? "எங்கும் அமைதியையும், அன்பையும் பரவவேண்டும் என்றும், போர் என்பது முட்டாள்தனமானது" என்றார்.
வைரல் ஆன வீடியோ
அந்த ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பரம எதிரிகள், நிரந்தர விரோதிகள், ஜென்ம ஜென்ம பகையாளிகள் என்ற கருத்தையும் எண்ணத்தையும் இந்த இளைஞர் சுக்குநூறாக்கி விட்டார்.
அன்றைய தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்திருந்தாலும், நம் மனங்களை வென்றது என்னவோ இந்த பாகிஸ்தானிய இளைஞர்தான்!