தனித்தமிழ் ஈழம் அமைய உதவுவேன்: ஜெயலலிதாவிற்கு பழ. நெடுமாறன் பாராட்டு
சென்னை: தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தான் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் கூறியிருப்பதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
மேலும் அவர் பேசுகையில்.. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண முடியும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடாகும் என்று கூறியிருப்பதையும், இலங்கையில் முற்றிலும் அமைதி நிலவி தமிழர்களுக்குப் பாதுகாப்பு நிலவும் சூழ்நிலை உருவானால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடு என்று அறிவித்திருப்பதையும் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.