பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த காளைகளை பிடித்து அசத்திய காளையர்களுக்கு குவிந்த பரிசுகள்
இன்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. சீறிப் பாய்ந்த 354 காளைகளை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் குவிந்தன.
மதுரை: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு முடிவடைந்தது. இதில் பங்கேற்க 850 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 354 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் காளை அடக்க பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் காளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவனியாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன.
இதனைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற முடிவு செய்யப்பட்டு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளான வாடிவாசல் அலங்கரிப்பு, பார்வையாளர் மேடையமைப்பு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 850 காளைகளுக்கும், 1,607 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டது.
இன்று காலையில் மாடுகளுக்கு கால் நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 9 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 354 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் தென்மண்டல காவல்துறை தலைவர் எஸ்.முருகன் தலைமையில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டின் நிறைவாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி இளைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், நன்றி தெரிவித்து விழாவை முடித்து வைத்தார்.
நாளை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அங்கும் அதற்கான ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.