பழனி சிலை முறைகேடு வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம்
பழனி தண்டாயுதபாணி கோயிலில் பஞ்சலோக சிலை செய்ததில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
Recommended Video
சென்னை: பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.
புதிய சிலை செய்வதில் மோசடி தொடர்பான வழக்கு என்பதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.
மூலவர் சிலை
பல்வேறு நோய்களை தீர்க்கும் மூலவர் தண்டாயுதபாணி சிலையை சித்தர் போகர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரும்பாடு பட்டு மக்களின் நன்மைக்காக உருவாக்கினார் என்பது வரலாறு. கடந்த 2004ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில்தான் பழனி மூலவர் சிலைக்கு ஆபத்து ஏற்பட்டது.
புதிய சிலை
அபிஷேகம் செய்யப்படுவதால் அந்த சிலை சேதமடைந்துவிட்டதாகவும், தானாக கீழே விழுந்தால் ஆட்சிக்கு ஆபத்து என்று கூறி அபிஷேகம் செய்வதற்காக அதே போல் புதிதாக ஐம்பொன் சிலை ஒன்று 2004ஆம் ஆண்டு செய்யப்பட்டது.
சிலையில் முறைகேடு
அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி தனது சிற்பக்கூடத்தில் செய்துள்ளார். கருவறையில் 2 மூலவர் ஒரு உற்சவர் என மூன்று சிலைகள் வைக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அந்த புதிய சிலை சில மாதங்களிலேயே கருப்பாக மாறவே, உடனடியாக அகற்றப்பட்டு பெட்டகத்தில் வைத்து பூட்டப்பட்டது.
தங்கத்தில் முறைகேடு
14 ஆண்டுகளுக்குப் பின்னர் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.
சிறையில் முத்தையா
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கம் எங்கே?
பழனி முருகன் கோவிலில் உள்ள விலை மதிப்பில்லாத நவபாஷாண சிலையை சிலர் வெளிநாட்டுக்கு கடத்திச்சென்று விற்க முயல்வதாகவும் தெரியவந்தது. பழனி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காணிக்கையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விவரங்கள், பக்தர்கள் வழங்கிய நன்கொடை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்
பழனி முருகன் கோவிலுக்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைக்கும்போது, ஏன் திருத்தணி கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலை செய்யும் பணிக்காக தங்கம் பெறப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி பொருட்கள் எங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினார் பொன் மாணிக்கவேல்.
சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றம்
விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் சிலை முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு இல்லை என்பதாலும், புதிய சிலை செய்வதில் மோசடி தொடர்பான வழக்கு என்பதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.