வெயில தணிக்க இப்படி ஏதாவது செஞ்சா தான் முடியும்... ஷவரில் ஜாலியாக கும்மாளம் போடும் பழனி கோவில் யானை
கோடை வெப்பத்தை தணிக்க பழனியில் கோவில் யானைக்கு ஷவர் பாத் மூலம் குளிச்சியூட்டும் முயற்சியை கோவில் நிர்வாகம் எடுத்துள்ளது.
பழனி : பழனி பெரியநாயகியம்மன் கோவிலுக்கு சொந்தமான கஸ்தூரி யானைக்கு ஷவர்பாத் மூலமாக வெப்பத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. வறட்சி காரணமாக வனங்களில் தண்ணீர் இல்லாததால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீருக்காக இடம்பெயர்ந்து வருகின்றன.
மனிதர்கள் தங்களுக்கு தெரிந்த வழிகளில் வெப்பத்தை தணித்து கொள்ளும் நிலையில் வாயில்லா ஜீவராசிகள் எப்படி சூட்டை தணித்துக் கொள்ளும் என்பதை உணர்ந்த பழனி பெரியநாயகி கோவில் நிர்வாகம் கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான கஸ்தூரி யானை கொட்டகை அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் யானை கஸ்தூரி காரமடையில் உள்ள தென்னந்தோப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
தீவனத்திற்காக இங்குள்ள வளாகத்தில் புற்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி பச்சரிசி உணவு தென்னை மட்டை போன்ற பல வகை உணவுகளும், பழங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி பெரியநாயகி அம்மன் கோவிலில் யானை குளிப்பதற்காக பிரம்மாண்டமான ஷவர் குளியல் அறை கட்டப்பட்டுள்ளது. இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் யானை ஷவரில் குளிக்கிறது. தண்ணீரைக் கண்டதும் குஷியாகிவிடும் குழந்தைகளைப் போல கஸ்தூரி யானையும் தண்ணீரில் உற்சாக குளியல் போடுகிறது.
பக்கெட்டில் உள்ள தண்ணீரை தன் துதிக்கையால் எடுத்து மேலே வீசிக் கொண்டு உற்சாகக் குளியல் போடும் கஸ்தூரி புத்துணர்ச்சியோடு காணப்படுகிறது. ஷவரில் ஜாலி குளியல் போடும் கஸ்தூரி யானையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.