சோலார் பேனல் மோசடி வழக்கு: திமுக மாஜி அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு- சரிதாநாயர் 'பொளேர்'
கோவை: நாட்டை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பிருப்பதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் தொழிலதிபர் சரிதா நாயர் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்.
கோவையில் வழக்கு
இவர் மீது கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக ஏமாற்றி விட்டதாக 2 நிறுவனங்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், உதவியாளர் ரவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை கோவை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக சரிதா நாயர் இன்று நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் சரிதா நாயர் கூறியதாவது:
சோலார் பேனல் கமிஷன்
கேரள அரசு சோலார் பேனல் மோசடி குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இந்த கமிஷன் முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.
பழனி மாணிக்கம்...
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 அரசியல்வாதிகளுக்கான தொடர்புகள் குறித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்துள்ளேன். முன்னாள் அமைச்சர்கள் ஆரியாடு முகமது, அனில்குமார், முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரான தி.மு.க. வை சேர்ந்த பழனிமாணிக்கம் ஆகியோரும் இவர்களில் அடக்கம்.
சினிமாவில்...
மலையாளத்தில் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து சுயசரிதை எழுதியுள்ளேன். இதை தமிழ் மொழியில் வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது.
அசோக் என்பவர் இயக்கும் 'கனலி' என்ற தமிழ் படத்தில் வில்லியாக நடித்து வருகிறேன். மலையாளத்தில் பையாவேலி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன். இதுதவிர வேணா பூவு படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறேன்.
இவ்வாறு சரிதா நாயர் கூறினார்.