பாலாறு பிரச்சனையில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது- ஸ்டாலின் குற்றச்சாட்டு
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலாறு குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்துக்கு நீர் ஆதாரமாக பாலாறு விளங்குகிறது. ஆனால் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக திமுக எப்போதும் போராடும். விவசாயிகளுக்கு இன்னல் வந்தால் திமுக குரல் கொடுக்கும்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா. திமுக போராட்டம் நடத்தும் என அறிவித்ததையடுத்து கூட்டு குடிநீர் திட்டடம் தொடங்கி வைக்கப்பட்டது. ழுமையாக நிறைவேற்றாமல் தொடங்கப்பட்ட திட்டத்தால் பல இடங்களுக்கு குடிநீர் செல்லவில்லை. வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு ஜெயலலிதா அரசே காரணம்.
இதேபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஒகேனக்கல் குடிநீர் திட்டமும் கிடப்பில் டப்பட்டது. தி.மு.க, போராட்டத்திற்கு பின் திறக்கப்பட்டது. அங்கும் மக்களின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. பாலாறு பிரச்னை எழும்போதெல்லாம் திமுக போராடி வருகிறது. உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆந்திர ரசின் செயல்பாடு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஆந்திர அரசு செயல்படுகிறது.
பாலாற்று பிரச்னையில் அதிமுக அரசு தூங்கி கொண்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற முதல்வர் கூட்டத்திலும், பாலாறு பிரச்னை குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக எல்லையில் உள்ள தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் அர்ச்சகரை விரட்டிவிட்டு ஆக்கிரமிக்கும் வகையில் ஆந்திர அரசு செயல்படுகிறது. இதை தட்டிக்கேட்க வகையற்ற ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று கூறினார்.