பாலாற்றில் புதிய அணை... ஆந்திர முதல்வர் சந்திரபாபு பேச்சுக்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு!!
சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பத்தாண்டுகளுக்கு முன் ஆட்சி அதிகாரத்தை இழந்த சந்திரபாபு நாயுடு, அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சீமாந்திரா" மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற குப்பம் தொகுதிக்கு நான்கு நாட்களுக்கு முன், வருகை தந்த சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது, "குப்பம் தொகுதி வளர்ச்சி பெற அனைத்துப் பணிகளையும் செய்வேன். பாலாற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவேன். இதன் மூலம் ஒரு துளி தண்ணீர் கூட வீணாக்காமல் உங்களுக்கு வழங்குவேன். பாலாற்றில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள நாளேடு, "ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென்று அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க., பா.ம.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி அணை கட்டும் முயற்சியை ராஜசேகர ரெட்டி அரசு கைவிட்டது" என்று திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாலாற்றில் அணை கட்டும் முயற்சியை ஆந்திர மாநில அரசு கை விட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
திமுக ஆட்சியின் போது, உச்ச நீதிமன்றம் 7-1-2008 அன்று வழங்கிய தீர்ப்பில், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாலாற்றில் அணை கட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு கூட்டம் ஒன்றைக் கூட்டிட அறிவுறுத்தியது. அதன்படி 11-3-2008 அன்று மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர் நடத்திய கூட்டத்தில், மத்திய நீர்வளக் குழுமம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை, ஆந்திர மாநிலம் இத்திட்டத்தைத் தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பாலாறு. பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழக மக்கள் குடிதண்ணீருக்குத் தவிக்க நேரிடும்.
சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கிட தெலுங்கு - கங்கை திட்டத்தை முன்னெடுத்துச் சென்று திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றித் தந்தவர் சந்திரபாபு நாயுடு. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகில் நடைபெற்றது.
நானும் சந்திரபாபு நாயுடுவும் தம்பி துரைமுருகன் மற்றும் அமைச்சர்களும் இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கு அவர் காட்டிய அக்கறையையும், முயற்சிகளையும் எடுத்துரைத்ததை என்னால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மனித நேயமும், அண்டை மாநில மக்களின்பால் அன்பும் கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு "பாலாற்றில் அணை கட்டுவேன்" என்று சொன்னார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
புதிய சீமாந்திரா முன்னேற்றத்திற்கு தன்னுடைய கனவுத் திட்டங்களின் செயலாக்கத்தில் சந்திரபாபு நாயுடு நேரத்தையும் நினைப்பையும் செலவிட வேண்டுமே தவிர, ஒருதரப்பு மக்களுக்கு பால் வார்ப்பதாகச் சொல்லி மற்றொரு தரப்பு மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்துவது அவருடைய நிர்வாகத் திறனுக்கு நிச்சயமாக பெருமை சேர்க்காது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.