கேரளாவிலும் வறட்சி நீரின்றி ஆரியங்காவு பாலருவி மூடல்!
வறட்சி காரணமாக தமிழக- கேரளா எல்லையில் உள்ள ஆரியங்காவு பாலருவி மூடப்படுகிறது.
தென்காசி: தமிழக, கேரள எல்லை ஆரியங்காவில் உள்ள சுற்றுலா தளமான பாலருவி தண்ணீர் இன்றி கடந்த 26 ந் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகிறது. இதனால் இங்கு எப்போதும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்வது வழக்கம். இங்குள்ள வனத்தில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போதிய மழை இல்லாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தென்மேற்கு பருவமழைக் காரணமாக 2039.7 மி.மீ. (203.97 சென்டி மீட்டர்) மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் 1352.3 மி.மீ. (135.23 சென்டி மீட்டர்) மழையே பெய்துள்ளது. என்றும் இதனால் கேரளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 34 சதவீத மழை யே பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்ய வில்லை இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல்வேறு பகுதிகளிதும் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதே போல கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக பெய்ய வேண்டிய பருவமழை பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது.
இதனை தொடந்து தமிழக கேரள எல்லை ஆரியங்காவில் உள்ள சுற்றுலா தளமான பாலருவி தண்ணீர் இன்றி கடந்த 26ந் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. வனவிலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். அவை பாலருவியில் விழும் குறைந்தளவு தண்ணீரை குடிக்க அருவி பகுதிக்கு படையெடுத்து வரும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து பாலருவியை மூடியிருப்பதாக கூறப்படுகிறது..