பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணம்.. தமிழக அரசு, சிபிஐக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணமடைந்தது குறித்த வழக்கில் தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பின்னர் சட்டவிரோதமாக அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை சேர்ந்த முதியவர்களின் உடல்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கிடந்ததாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கல்யாணராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலேஸ்வரம் கருணை இல்லம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசும், சிபிஐயும் 3 வாரத்தில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.