இந்தியாவின் இளம் விஞ்ஞானி ரிஃபாத்... பிளஸ் 2வில் எவ்வளவு மார்க் தெரியுமா?
தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்து சாதித்துள்ளார். இவர் சமீபத்தில் பிளஸ் 2 முடித்தவர்.
கரூர்: உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் என்ற அந்த இளைஞர் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம் மட்டுமே. இந்தியாவின் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வெற்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 750 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அறிவு திறமைக்கும், பள்ளி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நிருபித்துள்ளார் இந்த இளம் விஞ்ஞானி. இவர் வடிவமைத்துள்ள சிறிய வடிவிலான செயற்கைக்கோள் வரும் ஜூன் 21ஆம் தேதி விண்ணில் பறக்கிறது.
240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு, ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது
இளம் விஞ்ஞானி
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முகம்மது பாருக்; ஆந்திரா மாநிலம் திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலையில், வானியல் பேராசிரியராக பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் முகம்மது ரிஃபாத் ஷாருக்ராஜ், 17, பள்ளப்பட்டி கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் படித்து, பிளஸ் 2 முடித்துள்ளார்.
கலாம் சாட்
இவர், விண்வெளியில் உள்ள வெப்பம், சூழல், கதிர்வீச்சு ஆகியவற்றால், செயற்கைகோள் அடையும் மாற்றம் குறித்து கண்டறிய கையடக்க சாட்டிலைட்டை கண்டுப்பிடித்துள்ளார். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக தனது கண்டுபிடிப்பிற்கு 'கலாம் சாட்' என்று பெயரிட்டுள்ளார்.
விண்ணில் பறக்கும் செயற்கைக்கோள்
இந்த சாட்டிலைட் வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஏவுதளத்தின் விர்ஜீனியா ஏர்ஸ்பேஸ் தளத்தில் இருந்து, எஸ்.ஆர். - 4 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதனை பெருமையோடு பகிர்ந்து கொண்டுள்ளார் ரிபாத் ஷாருக். உலகம் முழுவதும் இருந்து, 57 நாடுகளை சேர்ந்த, 8,000 பேர் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட, 80 பேரில், நான் ஒருவன் மட்டும் இந்தியன் அந்த கையடக்க செயற்கைக்கோளுக்கு, ‘கலாம் சாட்' என, பெயர் வைத்துள்ளேன்.
குறைந்த செலவு
64 கிராம் எடையுள்ள சாட்டிலைட், 3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரில், ஒரு லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.இது வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், விவசாயம், வானிலை குறித்த ஆய்வுக்கான சாட்டிலைட்களை குறைந்த செலவில் உருவாக்க முடியும்.
தொடரும் ஆய்வு பணி
எட்டு சென்சார், ஆன்போர்டு கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் நிலை நிறுத்தப்படும். இந்த சாட்டிலைட், நான்கு மணி நேரம் விண்ணில் இருக்கும். பின், கடலில் விழுந்துவிடும். அதை மீட்டு மீண்டும் ஆய்வு செய்ய முடியும். தற்போது கையடக்க சாட்டிலைட்டை விண்ணில் நிரந்தரமாக நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அத்துடன், நிலவில் தரை இறங்க கூடிய வடிவிலான ரோவர் இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ரிஃபாத். அயராத ஆய்வு பணிகளுக்கு இடையே பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்து விட்டார் இந்த இளம் விஞ்ஞானி.
அறிவுத்திறமை
நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். இயற்பியலில் 130, வேதியியலில் 89, கணிதத்தில் 92 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த இளம் விஞ்ஞானி எடுத்த மதிப்பெண்கள் என்றால் நம்ப முடிகிறதா? நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துதான் அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். ஆனால் மதிப்பெண்களுக்கும், அறிவுத்திறமைக்கும் தொடர்பு கிடையாது என்று நிரூபித்துள்ளார் பித் ஷாருக்.
மதிப்பெண்களின் பின்னால் ஓடும் பெற்றோர்களே கவனிங்க!